Wednesday, December 11, 2013

அரவிந்தரின் கல்விச்சிந்தனைகள்
  Shri Aurobindo's Educational Thoughts


கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.



      "மனித இனம் பலவகையான தத்துவங்கள், நீதிநெறிகள்,அறிவியல்முறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு முழுமை நிலையை அடையலாம் என்ற கனவு கண்டது. அக்கனவை நனவாக்க, தான் கொண்ட முயற்சிகளில் அது எத்தனையோ வெற்றிகளை அடைந்து வருகின்றது. ஆயினும் வாழ்வின் இறுதி உண்மையை அறிவதில் அது வெற்றி பெறவே இல்லை. துன்பம், வறுமை,போராட்டம் ஆகியவற்றின் பிடியிலிருந்து அதனால் விடுபடவே முடியவில்லை. ஏந்த அரசியல் திட்டமோ, சமுதாயத் திட்டமோ, அறிவியல் முயற்சிகளோ அதற்கான வழியைக் காட்டவில்லை. உலகத்தில் இவ்வுண்மையைக் காணும் முயற்சியில் கீழ்த்திசை நாடுகளே ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. அவற்றுள்ளும் ஆன்ம பரிசோதனையின் மாபெரும் ஆய்வுக் கூடமாக இந்தியாவே இருந்து வந்துள்ளது. இங்குத்தான் ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனையோ மகான்கள் தோன்றியுள்ளனர்.”1

     ஆன்மீகத் துறையில் கருத்துச் செலுத்திய நம் முன்னோர்கள் சுயநலத்தைவிட பிறர்நலத்தைப் பேணுவதையே தம் உயிர்மூச்சாகக் கொண்டனர். இந்தப் பலமே பலவீனமாகி ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கக் காரணமாகிவிட்டது. நாட்டை அபகரித்து  ஆட்சி செய்து வந்த அந்நியர்கள், அவர்களுக்குரிய கல்வியையே நம்மீது திணிக்க ஆரம்பித்தனர்.

 “கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகள் மக்கள் அனைவருக்கும் ஒன்றே. ஆனால் அந்தந்த நாட்டுக்குரிய பண்பும் நாகரிகமும் என்பன சில இருக்கின்றன. இந்தியாவின் நாகரிகத்தை வளர்ப்பதற்கும்,இந்தியப் பண்பைப் பெருக்குவதற்குமான கல்வியே நமக்குத் தேவை”2

என்பதை நம் ஆன்றோர்கள் உணர ஆரம்பித்தனர். புதியதோர் கல்வித் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர்.

 “உண்மையான கல்வி,அறிவுக்குமட்டும் பயிறசியளிப்பதாக அமையக்கூடாது. உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிப்பதாக அமைய வேண்டும்”
என்று காந்தியடிகள். திட்டமிட்டார்.

      இந்நிலையில்தான் இருபதாம் நூற்றாணடின் இலக்கிய வல்லுநராகவும், கவிஞராகவும். மெய்ஞ்ஞானம் அருளும் யோகியராகவும் விளங்கிய மகான் அரவிந்தரும் புதியதோர் கல்வித் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்.
      அரவிந்தர், ‘கர்மயோகி’ என்ற பத்திரிக்கையில் 1910 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில்,
 “மனித சமுதாயம், சுதிமானலட ஜோதியைக் (Supermental Light) கிரகிக்கத் தன்னைத் தயார் செய்து கொள்வதற்கு ஒரு நல்ல கல்விமுறை  தேவைப்படும்”3
என்று கருதியுள்ளார்.

      இக்கருத்தின் அடிப்படையில், மகான் அரவிந்தரின் மனத்தில் எழுந்த கல்விச் சிந்தனைகள் பற்றியும், கற்பித்தல் முறையில் அவர் ஏற்படுத்த நினைத்த மாற்றங்கள் பற்றியும், அவரது புதிய கல்வித் திட்டம் பற்றியும் உள்ள கருத்துக்களைத் தொகுத்தளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி என்பது யாது?
கல்வி என்பது  பற்றி சுவாமி சித்பவானந்தர்,
 “எழுதவும்,படிக்கவும் கற்றுக் கொள்வதே கல்வி என்று சொல்லுவது வழக்கம். நம் வாழ்க்கைக்குரிய பயிற்சியைத்தான் உண்மையில் கல்வி என்று சொல்ல வேண்டும்”,4 
என்று கூறியுள்ளார்.
மகான் அரவிந்தர், 
“முன்பெல்லாம் கல்வி என்பது குழந்தையின் இயற்கையை இயந்திரம் போல், எல்லோரும் போன தடத்திலேயே போகும்படியாக வற்புறுத்துவதற்காகத்தான் இருந்தது”5
என்று குறி;ப்பிட்டுள்ளார்.

மனத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு
மகான் அரவிந்தர் கல்வியின் அடிப்படையைப் பற்றிக் கூறும் பொழுது,
“குழந்தைப் பருவம்,சிறார் பருவம், வாலிபப் பருவம் ஆகிய பருவங்களிலே மனிதனது மனத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவே கல்வியின் உண்மையான அடிப்படையாகும்”.6
என்று கூறி, மேலும் அவர்,
மனத்தை நான்கு அடுக்குகளாகப் பிரித்துக் காட்டி,அடிப்படையானவற்றைத் தெளிவுப்படுத்துகின்றார்
.
1. சித்தம் (Citta) : பழைய அனுபவங்களை, நம் மனத்தில்  பதிந்துள்ள
       முத்திரைகளாகத் தேக்கி வைக்கும் தளம் சித்தம் அல்லது ஞாபகக் குவியல்        அறையாகும்.
2. மனம் (Manam) : இந்த இரண்டாவது அடுக்குத்தான் உண்மை மனமாகும்.
       இதனை இந்திய உளநூல்கள், “ஆறாவது உணர்ச்சி” எனக்
       குறிப்பிடுகின்றன.
3. புத்தி (Buddhi) : மூன்றாவது அடுக்குப் புத்தியாகும். சிந்தனைக்கு
        உண்மையான கருவி இதுதான். மனமெனும் இயந்திரத்தின் ஏனைய
        பகுதிகள் அறியும் வி~யங்களைத் தொகுத்துச் சீர்படுத்தி
        ஒரு முடிவு கட்டுவது இதுவே.
4. ப்ரக்ஞா விலாசம் (Genius) : இஃது நான்காவது அடுக்காகும்.
        இது மனிதனிடத்தே இன்னும் முழுமையான வளர்ச்சியடையா
        விடினும் சிறிது சிறிதாக ஒரு பரந்த வளர்ச்சியையும்,
        பரிணாம வளர்ச்சியிலே மேன்மேலும் முழுமையையும்
        அடைந்து கொண்டிருக்கிறது. ஞானத்தின் உயர்தளமாம்,
        இதன் தனிப்பட்ட விசே~மான ஆற்றல்களைப் “ப்ரக்ஞா விலாசம்”
         என்று நாம் சொல்கின்றோம்.7

அரவிந்தரின் கல்விச்சிந்தனைகள்
        “மாணவரிடத்தே காணும் இப்-ப்ரக்ஞா விலாசம் என்ற மகத்தான திகைப்பூட்டும் மனவியல்பைக் கல்வியாளர்கள் இறுகப் பற்றி ஆராய்ந்ததில்லை. பள்ளிப் பாடங்களை மட்டும் போதிப்பவர் ப்ரக்ஞா விலாசத்தை இகழ்ந்து நசுக்குவதற்குத் தன்னால் முடிந்ததைச் செய்கிறார். சற்றுப் பரந்த மனமுடைய ஆசிரியர், இதை வரவேற்கிறார் அவ்வளவுதான். மனித இனத்திற்கே மிகவும் முக்கியம் வாய்ந்த இம்மனவியல்புகளை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாது. இவற்றைப் புறக்கணிப்பது மதியீனமாகும். அரைகுறையான இவற்றின் வளர்ச்சியைப் பூரணமடையச் செய்ய வேண்டும். இவற்றுடன் கலந்துள்ள பிழைகள், ஏறுமாறான தற்போக்கு,ஒருதலைப்பட்ட போலிப்புனைவுகள் முதலியன கவனமாகவும் சாதுர்யமாகவும் அகற்றப்பட வேண்டும். ஆனால் ஆசிரியரால் இதைச் செய்யமுடியாது. ஆசிரியர் இவ்வி~யத்தில் தலையிட்டால் தூசு தும்புகளைத் தூற்றி அகற்றும்போது நல்ல மணிகளையும் சேர்த்து அகற்றிவிடுவார். அவர் செய்யக்கூடியது வளரும் ஒரு ஜீவனை, அதன் போக்கிலேயே பூரண வளர்ச்சி அடையும்படி விடுவதுதான்”.8 
அரவிந்தரின் இச்சிந்தனை,
“ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தாமாகவே அறிவினைப் பெறும் சு10ழலை அளித்து அனுமதித்தால் போதும்”,
என்ற மேல் நாட்டுக் கல்விச் சிந்தனையாளர் ஹெர்பர்ட் ஸ்பென்னர் கருத்தினையும்,
 “கல்விமுறை என்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை, அவர்கள் கற்க அனுமதிக்கப்படுவதே”
என்ற கவியரசர் தாகூர் கருத்தினையும் இணைத்துப் பார்க்கத்தக்கதாய் உள்ளது.
       ‘நளினி காந்த் குப்தா’ என்பவர் தாம் எழுதிய “உண்மையான கல்வி” என்ற கட்டுரையில்,
“சேர்த்துக் குவிப்பதல்ல கல்வி. நிறைய பொருள் வைத்திருப்பவன் செல்வன் அல்ல. தனது செல்வத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவனே செல்வன். அதுபோல் நிறைய தகவல்களைத் தெரிந்துள்ளவன் நிறைய பொதி சுமப்பவனே. உணர்வின் வளர்ச்சியே உண்மைக்கல்வி”9 
என்று குறிப்பிட்டுள்ளமையும் ஈண்டு எண்ணத்தக்கது.

கற்பித்தல் பற்றிய அரவிந்தரது கொள்கைகள்
     கற்பித்தல் முறைகளைப் பற்றி அரவிந்தர் கூறுமிடத்து, அவற்றை மூன்று கொள்கைகளாகப் பிரித்துக் காட்டுகிறார்.
“1. எதையும் கற்பிக்க முடியாது என்பதுதான் உண்மையான போதனா முறையின் முதற்கொள்கையாகும்.
 2. மனத்தின் வளர்ச்சியில், அம்மனத்தோடு கலந்து ஆலோசிப்பது என்பதே இரண்டாவது கொள்கையாகும்.
 3. இருப்பதைக் கொண்டு, இருக்கப் போவதற்காக உழைத்தல், இதன் மூன்றாவது கொள்கையாகும்.”10
இயற்கைக் கொள்கையினரான  கல்விச் சிந்தனையாளர் ரூஸோ, 
கற்பவர்களுக்குப் பாடங்களை அளிக்காதீர்கள், அனுபவங்களை அளியுங்கள்”
என்று கூறியுள்ளமையும் அரவிந்தரின் கருத்துக்கு அரண் செய்வதாய் உள்ளது.

ஆசிரியர் பற்றி அரவிந்தர்
      கல்வி பற்றிய தனனுடைய தெளிவான சிநதனைகளை விளக்கும் அரவிந்தர், ஆசிரியரைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அறிவுறுத்துபவரோ, நன்றாக வேலை வாங்குபவரோ அல்ல ஆசிரியர். மாணவனின் உபகாரி. வுழிகாட்டி ஆவார். கருத்துக்களைத் தலைமீது சுமத்துவது அல்ல, குறியுணர்த்துவதுதான் அன்னாரின் வேலை. மாணவனது மாற்றத்திற்கு அவர் உண்மையாகப் பயிற்சியளிக்கவில்லை, தனது அறிவுப் பொறிகளைச் செம்மையாக்குவது எப்படி என்று மாணவர்களுக்குக் காட்டிக் கொடுக்கிறார், அவர்களது செயற்பாட்டில் கைகொடுக்கி;றார்,உற்சாகப்படுத்துகி;றார்,அறிவை அவர் ஊட்டவில்லை, தாமாகவே அறிவைச் சம்பாதிப்பது எவ்வாறு என்று வழிகாட்டுகிறார், அகத்தேயுள்ள ஞானத்தை அவர் வெளிக்கொணரவில்லை. ஆனால் அது எங்குப் புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு புறத்தே அடிக்கடி எழச் செய்யலாம் என்பதையும் உணர்த்துகிறார்.”11

பவித்ரா என்பவர், அரவிந்தரின் கல்விபற்றி,
“ஆசிரியரின் ஆட்சி அறிமுகமாகவும் ஆலோசனையாகவும் இருக்குமேயொழிய, ஒருபோதும் கட்டளையாகவோ,சுமத்துவதாகவோ இருக்காது,’12 
என்று கூறியுள்ளமையும், 
சுவாமி சித்பவானந்தர்,
“வளர்கின்ற செடிக்கும். வளர்க்கினற தோட்டக்காரனுக்கும் உள்ள தொடர்பே, மாணாக்கனுக்கும், ஆசிரியருக்கும் இருக்கவேண்டும்,”13
என்று உணர்த்தியுள்ளமையும் இங்குக் கருதத்தக்கன.

அரவிந்தரின் கல்வித்திட்டம்
      அரவிந்தர்,  தம் ஆன்ம உணர்வில் முகிழ்த்த பல்வேறு கல்விச் சிந்தனைகளையும் இணைத்து,  நம் நாட்டிற்குத் தேவையானதும், அவசியமானதும், பொருத்தமானதுமான கல்வி, “தேசியக் கல்வியே” (National Education) எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்,
“தேசியக் கல்வியி;ன் மைய நோக்கமானது, மனித இனத்தின் சக்தியையும், ஆத்ம உணர்வையும் வளர்ப்பதேயாகும். அதை ஏன்னுடைய நோக்கில் கூறுவேனேயானால், அறிவையும்,நடத்தையையும், பண்பாட்டையும் முறையாகப் பயன்படுத்தும் சக்தியைத் தூண்டுதலேயாகும் என்பதே,”14
என்று மொழிந்துள்ளார்.

அரவிந்தர் மேலும்,
“உண்மையான தேசியக் கல்வியின் நோக்கமும், கொள்கையும் நவீனகால உண்மையையும், அதன் அறிவையும் நிச்சயமாக அசட்டை செய்வதாகாது. ஆனால் நம் நாட்டின் இயல்பான தன்மை. நம் மணணுக்கேற்ற அறிவு, நமது சொந்த ஆன்ம உணர்வு இவற்றின் அடிப்படையை ஏற்றுக் கொள்வதாகும்,”15
என்று தெளிவுப்படுத்துவதிலிருந்து அவருடைய கல்வித் திட்டத்தின் நோக்கம் புலனாகிறது.

ஒருமைப்படுத்தப்பட்ட கல்வி (INTEGRAL EDUCATION)
“அரவிந்தரால் திட்டமிடப்பட்ட குறிக்கோள்களை உள்ளடக்கியதும், மனித இயல்புகள் யாவும் முழுமையாகப் பெறப்பட்டதுமான கல்வி, ‘ஒருமைப்படு;த்தப்பட்டகல்வி’ அல்லது ‘முழுமைக்கல்வி’ என அழைக்கப்படுகிறது. அரவிந்தரின் துணையாக இருந்து அவரது ஆன்ம உணர்வுகளைப் பெற்ற அன்னையார்,  இக்கல்வியை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அமைத்துள்ளார்.”16
அவையாவன:
                                                   1. உடல்நலக்கல்வி (Physical Education)
                                                   2. ஜீவாதாரக்கல்வி (Vital Education)
                                                   3. மனநலக்கல்வி (Mental Education)
                                                   4. உளநலக்கல்வி (Psychic education)
                                                   5. ஆன்மீகக்கல்வி (Spiritual Education)

ஸ்ரீ அரவிந்தர் பன்னாட்டுக் கல்வி மையம்
(Shri Aurobindo International Centre of Education)
     அரவிந்தரின் கல்விச் சிந்தனைகளையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு 1943 ஆம் ஆண்டு ஆசிரமப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் 1951 இல் அரவிந்தரின் மறைவுக்குப் பின் அவருடைய பெயராலேயே பன்னாட்டுக் கல்வி மையமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அரவிந்தரின் கல்விக் கொள்கைகளை நிறைவேற்றி வரும் இக்கல்வி மையம், இன்று ஒரு பல்கலைக்கூடமாக வளர்ந்துள்ளது.

முடிவுரை
       “உலகிலுள்ள பிற நாட்டவரெல்லாம் ஆன்மீக உதவிக்காகவும், மெய்ஞ்ஞான ஒளிக்காகவும் இந்தியாவை நர்டும் இந்த வேளையில். இந்தியா தனது ஆன்மீகச் செல்வங்களை விட்டெறிந்து விடுமானால். அது விதியின் கொடிய விளையாட்டாகவே இருக்கும். இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது, ஏற்படாது.. இந்தியா தனது உயர்நிலையை அடைய வேண்டுமானால், அதற்கு அகத்தேயும்,  புறத்தேயும் பெரியதொரு விடுதலையும் மாற்றமும், அகவாழ்விலும் புறவாழ்விலும் விரிவான முன்னேற்றமும் தேவையாகும்.”17
இந்த மாற்றமும் ஏற்றமும் கல்வியினால்தான் முடியும். அதற்கு அரவிந்தரின் கல்விச் சிந்தனைகள் கட்டாயம் உதவும். அவரது ஆன்மீக உணர்வுகள் உறுதுணையாய் இருக்கும்.

                                                                     oooooooooooooooooooo


அடிக்குறிப்புகள்:

1. “இந்தியாவின் ஆன்மா” – அரவிந்தர் - அமரபாரதம் - கட்டுரை,பக். 1.
2. “கல்வி” – சுவாமி சித்பவானந்தர், முன்னுரை.
3. “வைகறை” – முத்திங்களிதழ், 1971 -1 பக். 39.
4. “கல்வி” – சுவாமி சித்பவானந்தர்,பக். 18.
5. “வைகறை” – முத்திங்களிதழ், 1976 -4 பக். 31.
6. Shri Aurobindo and the Mother on Education – Page 8 to 10
7. Shri Aurobindo and the Mother on Education – Page 13.
8. Shri Aurobindo and the Mother on Education – Page 13.
9.  “வைகறை” – முத்திங்களிதழ்ää 1970 -3 பக். 51.
10. Shri Aurobindo and the Mother on Education – Page 8 to 10
11. “வைகறை” – முத்திங்களிதழ்ää 1971 -1 பக். 40.
12. Education and the Aim of Human Life – by Pavitra -  Page 53.
13. “கல்வி”– சுவாமி சித்பவானந்தர்ää பக்.115.
14. Shri Aurobindo and the Mother on the Essential Ideals of all Mankind – page 56.
15. Shri Aurobindo and the Mother on the Essential Ideals of all Mankind – page 57.
16.      Education and the Aim of Human Life – by Pavitra -  Page 54.
17. “இந்தியாவின் ஆன்மா” பக்.54.

                                                                oooooooooooooooooooo



(தமிழ்நாடு தத்துவஇயல் மன்றம் - ‘அரவிந்தரின் தத்துவம்’ என்ற தலைப்பில் 10..3.1985 இல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் நடத்திய 5 வது கருத்தரங்கில் வாசிக்கப்;பட்ட ஆய்வுக் கட்டுரை)





No comments: