Tuesday, December 17, 2019

உலக அரங்கில் திருக்குறள்

கவிஞர், கலைமாமணி,  முனைவர்  நா. இராசசெல்வம்
தமிழ் விரிவுரையாளர் (ஓய்வு),
குறிஞ்சி நகர், புதுச்சேரி605008. இந்தியா.
கைபேசி: 0091 9486009909.
                                                                மின்னஞ்சல்: nrajaselvam@gmail.com


     உலக அறிஞர்கட்கு இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது அகிம்சையைப் போதித்த புத்தரும், அறப்போராட்டத்தை வழி நடத்திக் காட்டிய காந்தியடிகளுமேயாம். அதேபோல் உலக அறிஞர்கட்குத் தமிழ்நாடு என்றவுடன் நினைவுக்கு வருவது திருக்குறளும் திருவள்ளுவருமேயாம். இப்பெருமையினாலேயே மகாகவி பாரதி,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாடினார்.

       அத்தகு பெருமைக்குரிய நமது திருக்குறளை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர்கள் யார்? திருக்குறள் பற்றிய உலக அறிஞர்களின் மதிப்பீடுகள் யாவை? நமது திருக்குறள் உலகில் எவ்வாறெல்லாம் போற்றப்படுகின்றது? என்பன பற்றிய ஆய்வே இக்கட்டுரையாக விரிகின்றது.

திருக்குறளைத் தமிழகம் தாண்டி முதலில் கொண்டு சென்றவர்கள்:

       முதல், இடை, கடை எனும் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகமாக விளங்கிய தமிழகம், பிற்காலத்தே சேர, சோழ, பாண்டிய நாடெனும் மூன்றாகப் பிரிந்திருந்தது. பின்னர் அதுவும் மாறி, தற்காலத்தே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எனப் பல மொழிகள் பேசும் மாநிலங்களாகக் கிளைத்திருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற் தோன்றிய திருக்குறள் பல நூறாண்டுகள் வரை தமிழகப் புலவர்களால் மட்டுமே பயிலப்பட்டு வந்தது. அது 16-ஆம் நூற்றாண்டில்தான் தமிழகத்தைத் தாண்டிப் பிற மொழியாளர்களிடம் சென்றது.

திருக்குறளின் முதல் மொழி மாற்றமாக நமக்குக் கிடைப்பது மலையாள மொழி எழுத்துக்களில் (Transcription) எழுதப்பட்ட முயற்சியே ஆகும். இம்மொழி மாற்றம் கி.பி. 1595-இல் ஈட்டி மகேசு பணிக்கர் என்பவரால் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அது ”திருக்குறள் பாஷா” (Tirukkural Bhasha) என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றது. திருக்குறளின் இம்முதல் மொழி மாற்றத்தை L.V. இராமசாமி ஐயர் அவர்கள் பதிப்பித்துள்ளார். இப்பதிப்புப் பற்றி இராமவர்மா ஆய்வு மையத்தினரின் 1938, 1940, 1941-ஆம் ஆண்டின் செய்திக் குறிப்பேடுகளில் Kural in Prose form Tamil Couplets in Malayalam Script – Vol. VI – Part II – 1938, Vol. III – Part I – 1940, Vol. IX – Part I – 1941 என்று காணப்படுகின்றன (M.A. Manickavelu & K.D. Thirunavukkarasu. 1986).  எனவே திருக்குறளை முதன்முதலில் தமிழகத்தைத் தாண்டி வெளி உலகிற்கு கொண்டு சென்ற பெருமை மலையாள மொழியாளர்களையே சாரும்.

திருக்குறளை முதன் முதலில் மேலைநாட்டினருக்கு அறிமுகப்படுத்தியவர்:

       திருக்குறள் ஓர் அறநூல். ஆயினும் அது உலக அறிஞர்களால் போற்றப்படும் ஓர் உயர்ந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. மதத்தின் அடிப்படையில் எழுந்த வேத நூல்களைத் தாண்டி, ஏறக்குறைய உலகமொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள் மட்டுமே என்பது தமிழர்களாகிய நாம் பெருமை கொளத்தக்க செய்தியாகும். உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறளைக் கொண்டு செல்லும் இவ்வரிய பணிக்கு வித்தாக இருந்தவர் வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் ‘கான்ஸ்டாண்டினஸ் ஜோசப் பெஸ்கி (Rev. Fr. Constantinus Joseph Beschius) எனும் இத்தாலி நாட்டைச் சார்ந்த பாதிரியார் ஆவார். அவர், திருக்குறள் அச்சேறாத காலத்திலேயே ஓலைச்சுவடியில் இருந்த குறட்பாக்களைப் படித்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் (Tirukkural Book I & II) மட்டும் கி.பி. 1730-இல் இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்து முதன் முதலில் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திருக்குறளை முழுமையாக மொழிபெயர்த்து உலகிற்கு அளித்தவர்:

       வீரமாமுனிவரின் மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, திருக்குறளின் பெருமையை ஐரோப்பியர்கள் உணரத் தொடங்கினர். அதனால் 1767-இல் பெயர் அறியப்படாத ஆசிரியரால் பிரஞ்சு மொழியிலும் (Kural de Tirouvalluvar), 1794-இல் N.H.கிண்டர்ஸ்லீ (Nathaniel Edward Kindersley) என்பவரால் ஆங்கில மொழியிலும் (Teroovalluvar Kuddal or The Ocean of Wisdom – Selections in Verse) திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இப்பழமையான மொழிபெயர்ப்புகளால் திருக்குறள் ஐரோப்பியர்களின் கவனத்தை வெகுவாகக் கவரத் தொடங்கியது. இவர்களைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எல்லீஸ் (1812), துரு (1840), கோவர் (1872), இராபின்சன் (1873), லசாரஸ் (1885) ஆகியோரும், பிரஞ்சில் ஏரியல் (1848), துய்மா (1854), லமாரஸ் (1867), லூயி ழக்கோய் (1867) ஆகியோரும், ஜெர்மனியில் கேமர்ஸ் (1803), பிரடரிக் ரூக்கே (1847), கார்ல் கிரால் (1854), வில்லியம் & நார்கேட் (1866) ஆகியோரும், லத்தீனில் கிரால் சார்லசும் (1866) திருக்குறளை மொழிபெயர்த்தனர். ஆயினும் அம்மொழிபெயர்ப்புகள் யாவும் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை மட்டுமே கொண்டிருந்தன. அதற்குக் காரணங்களும் இருந்தன. அம்மொழிபெயர்ப்பாளர்களில் பெரும்பான்மையோர் கிறித்துவப் பாதிரியார்களாக இருந்தனர். அவர்களுக்குப் பாடஞ் சொன்ன புலவர்கள், அப்பாதிரியார்களிடம் காமத்துப்பாலை விளக்கிச் சொல்ல தயங்கியிருக்க வேண்டும். பாதிரியார்களும் காமம் என்ற சொல்லை ‘Lust’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குக் கூறப்படும் பொருட்களை மனத்தில் கொண்டும் மயங்கியிருக்க வேண்டும். இத்தகு காரணங்களால் 1886 வரை ஐரோப்பியர்கள் யாவரும் காமத்துப்பாலைத் தவிர்த்துவிட்டு அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டுமே மொழி பெயர்த்து வந்தனர்.

       இந்நிலையில் 1886-இல் ஜி. யு. போப் (George Uglow Pope) அவர்கள்தான் முதன் முதலாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது பற்றி போப் அவர்கள்,

“காமத்துப்பால் என்பது பற்றிய தவறான எண்ணங்களால் நானும் சில ஆண்டுகள், அதனைப் படிக்காமல் தவிர்த்து வந்திருந்தேன். மொழி பெயர்ப்பாளர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தாமல் காமத்துப்பாலை மொழி பெயர்க்க முடியாது என்று துரு அவர்கள் கூறியுள்ளதை மனத்தில் கொண்டும், மனத்துக்கண் மாசிலனாதல் என்ற குறளுக்கு அவர்கள் கூறியுள்ள விளக்கத்தின் அடிப்படையிலும் நான் காமத்துப்பாலைப் படிப்பதைத் தவிர்த்து வந்தேன்”

என்று தம்முடைய மொழிபெயர்ப்பின் முகவுரையில் விளக்கியுள்ளார்.

       அவர் மேலும்,

“காமத்துப்பாலின் தூய்மையைப் புரிந்து கொண்டு, அதனைப் படித்து, மொழிபெயர்ப்பது ஒரு பெரும் தொண்டாகும் என்று கருதி மொழி பெயர்த்தேன். அதன் பின்னரே டாக்டர் கிரால் அவர்கள் ஜெர்மன் மற்றும் லத்தீன் மொழியிலும், ஏரியல் அவர்கள் பிரஞ்சு மொழியிலும் வெளியிட்டனர்”

என்று குறிப்பிட்டுள்ளார். காமத்துப்பாலைக் கண்டு, மேனாட்டார்கள் யாவரும் தயங்கி நின்ற நிலையில் ஜி. யு. போப் அவர்களே முதன் முதலில் திருக்குறள் முழுமையையும் துணிந்து மொழிபெயர்த்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

திருக்குறளை முதன் முதலில் தமிழ் அச்சில் கொண்டு வந்தவர்:

       கி.பி. 1457-இல் அச்சு இயந்திரம் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து கி.பி. 1556-இல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் கேரளாவின் கொல்லத்தில் கி.பி. 1578-இல் இந்திய மொழிகளின் முதல் அச்சுப் புத்தகமாகத் ‘தம்பிரான் வணக்கம்’ எனும் தமிழ்நூல் அச்சடிக்கப்பட்டது. அதன்பின் சுமார் 130 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1712-இல் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் முதல் தமிழ் அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. ஆயினும் சுமார் 100 ஆண்டுகள் வரை, தமிழ்நாட்டு அச்சுக்கூடங்களில் ஐரோப்பிய மொழியிலுள்ள கிறித்துவ மத போதக நூல்களே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன (இ. சுந்தரமூர்த்தி. 2000). இந்நிலையில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் திருக்குறளின் அருமை பெருமைகளை உணர்ந்த ஐரோப்பியர்கள், அதனை அச்சேற்ற அனுமதித்தார்கள். அதுவரை தமிழில் ஓலைச்சுவடிகளில் மட்டுமே உலா வந்த திருக்குறள், கி.பி. 1812-இல் ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் பெயரில் அச்சில் வெளிவந்தது. அது ‘தொண்டை மண்டலச் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப் பிள்ளை குமாரன் ஞானப் பிறகாசானால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசததினச் சரிதையின் அச்சுக்கூடம் இ-ஆண்டு சூஅளயஉ (1812)’  எனும் இந்நூலின் தலைப்புப் பக்கத்தில் காணப்படும் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட்டது. மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்ட இப்பதிப்புத்தான் தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் திருக்குறளின் முதல் அச்சு நூலாகும். எனவே திருக்குறளை முதன் முதலில் தமிழில் அச்சில் ஏற்றிய பெருமை தஞ்சை ஞானப்பிரகாசன் அவர்களையே சாரும்.

உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே இலக்கியம் திருக்குறள்:

       ஜி.யு.போப் அவர்களின் முழுமையான மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, திருக்குறளின் அருமை, உலகம் முழுவதற்கும் தெரிய வந்தது. அதுவரை திருக்குறளை ஓர் அறநூலாக மட்டுமே கண்டு வந்த ஐரோப்பியர்கள், அதன்பின், அதனை ஓர் அரிய இலக்கியமாகவும் போற்றத் தொடங்கினர். அதனால் உலகிலுள்ள ஒவ்வொரு மொழியினரும் தத்தமது மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவாவினர். அம்முயற்சியில் இதுவரை உலக மொழிகளில் 82 மொழிகளுக்கு மேல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் 60 மொழிபெயர்ப்புகளுக்கு மேல் வந்துள்ளன. அதுபோல் இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
       உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநூல்களாகக் கிறித்துவர்களின் விவிலியம் (The Bible), திருவள்ளுவரின் திருக்குறள் (Thirukkural), இசுலாமியர்களின் அல்குரான் (The Quran), இந்துக்களின் பகவத்கீதை (The Bhagavad Gita), சீனர்களின் தாவோ தெ சிங் (Tao Te Ching), கன்பூசியரின் போதனைகள் (The Confucian Analects), புத்தரின் தம்மபதம் (The Dhammapada) போன்றவைகள் திகழ்கின்றன. இவற்றுள் திருவள்ளுவரின் திருக்குறள் மட்டுமே மதத்தின் அடிப்படையில் எழுதப்படாத அறநூலாகும். உலகின் எந்த இனத்தவரையும், எந்த நாட்டவரையும், எந்த மதத்தினரையும், எந்த மொழியினரையும் குறித்துக் காட்டாமல் உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துவதான அறக்கருத்துக்களை இலக்கியத் தரத்தோடு தருகின்ற ஒரே நூல் திருக்குறள் மட்டுமேயாம். அதனாலேயே ஓதற்கெளிதாய், உணர்தற்கரிதாகி, வேதப்பொருளாய் விளங்குகின்ற நமது திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுவதோடு, உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உலக அறிஞர்கள் பார்வையில் திருக்குறள்:

       திருவள்ளுவரின் பெருமையைத் திருவள்ளுவமாலை நமக்குத் தெள்ளிதின் காட்டுகின்றது. “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்ற மகாகவியின் வாக்கிற்கொப்ப, உலக அறிஞர்கள் பலரும் நமது திருக்குறளைப் பாராட்டி மகிழ்கின்றார்கள். அவர்களுள் வீரமாமுனிவர், ஏரியல், எட்வர்ட் கிண்டர்ஸ்லி, ஜி.யு. போப், கார்ல் கிரால், பிரடரிக் கேமரர், எல்லீஸ், சார்லஸ் இ. கோவர், அலெக்ஸாண்டர் பியாட்டி கோர்ஸ்கி, யு. ஹிசி, லியோ டால்ஸ்டாய், ஆல்பர்ட் சுவைட்சர், ஜான் லசாரஸ், எம்மன்ஸ் இ. ஒயிட், சர். ஏ. கிராண்ட், கமில் சுவலபில் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அப்பெருமக்களின் பாராட்டுரைகள் யாவற்றையும் விரிக்கிற் பெருகும். விரிவஞ்சிப் பதச் சோறாகச் சிலவற்றை மட்டும் ஈங்குக் காட்டுவாம்.

‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ’ என்ற மாணிக்கவாசகரின் அருள்மொழிக்கு ஒப்ப, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் உரிய பெயர்களை அறியாத புலவர் பெருமக்கள், திருவள்ளுவருக்கு முதற்பாவலர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழியார், தெய்வப்புலவர் எனப் பல பெயர்களிட்டும், அவர்தம் நூலுக்கு முப்பால், திருக்குறள், தமிழ்மறை, உலகப்பொதுமறை, வான்மறை, வாயுறை வாழ்த்து எனப் பல பெயர்களிட்டும் அழைத்து வருகின்றனர். இதனை அப்படியே எதிரொலிப்பது போல்,

பிரஞ்சு அறிஞர் ஏரியல் அவர்கள்,

“The Book without a name, by an author without a name”

என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்க குறிப்பாகும்.

‘எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்’ எனத் திருவள்ளுவமாலையில் மதுரைத் தமிழ்நாகனார் புகழ்ந்து பாடியுள்ளது போல்,

ஆங்கில் அறிஞர் எட்வர்ட் ஜூவிட் இராபின்சன் அவர்கள்,

”Tirukkural contains all things and there is nothing, which it does not contain”

என்று புகழ்ந்து கூறியிருப்பது குறட்பாவின் அருமையை உலகே உணர்ந்துள்ளது என்பதற்கான அரும்பெரும் சான்றாகும்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறட்பாவின் அருள்மழையில் நனைந்த,

செக்கோஸ்லோவாகியா பேரா. கமில் சுவிலபில் அவர்கள்,

“The Thirukkural, one of the great books of the World, one of those singular emanations of the human heart and spirit which preach positive love, forgiveness and peace”

என்று பாராட்டியுள்ளமை, நாம் எண்ணியெண்ணி இறும்பூது எய்தத்தக்க செய்தியாகும்.

தாய்வான் கவிஞர் யு ஹிசி அவர்கள்,

“Whenever I read a couplet from Thirukkural here and there, as I do daily, I am surprised at almost every readings at its freshness and relevance to the problems of our times – for such is its Universality and Humanism”

(நான் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு திருக்குறளைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிப் படிக்கும் நேரத்திலெல்லாம் அதன் உலகப் பொதுமையும் மனித நேயமும் போல, அதில் காணும் புத்துணர்வையும் அது தற்காலத்திய சிக்கல்களைத் தொடர்புபடுத்துவதையும் கண்டு வியந்து போகிறேன்.)

என்று திருக்குறளின் தனித்தன்மையை வியந்து பாராட்டுவதைக் கண்டு, நாமும் அல்லவா வியந்து நிற்கிறோம்.

உலக அரங்கில் திருக்குறள்:

       ’வள்ளுவனைப் பெற்றதால் பேற்றதேபுகழ் வையகமே’ எனும் பாவேந்தனின் வாக்கிற்கு அணி சேர்க்கும் வகையில், உலக அரங்கில் திருக்குறள் எவ்வாறெல்லாம் போற்றப்படுகின்றது என்பதற்கான ஒரு சில செய்திகளையும் இனிக் காட்டுவாம்.

       டால்ஸ்டாயின் அறிமுகத்தினால் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு முழுவதையும் படித்துணர்ந்த மகாத்மா காந்தியடிகள், திருக்குறளை, அதன் மூல மொழியில் படிப்பதற்காகவே தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார். அவர், ‘இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், விந்தியத்திற்கு வடக்கே உள்ளவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். மேலும் அவர், தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில், இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. இச்செய்திகளெல்லாம் மகாத்மாவின் உள்ளத்தில் திருக்குறள் எத்துணை உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது என்பதற்குச் சான்றுகளாகின்றன.

       இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியார், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளைப் படித்து அறிந்து கொண்டார் என்ற செய்தியும், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் பெர்னாட்ஷா புலால் உணவை மறுத்து வந்தோடல்லாமல், ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ (260) என்ற குறட்பாவின் கருத்தினை அடிக்கடி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்ற செய்தியும், அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையில் திருக்குறள் இடம் பெற்றிருக்கின்றது என்ற செய்தியும் உலக அரங்கில் திருக்குறளுக்கு உள்ள இடங்களை எடுத்துக் காட்டுகின்றன.

       தமிழ்நாட்டின் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வான்மறை தந்த அய்யன் வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் தமிழ்நாடு அரசு சிலையெழுப்பிச் சிறப்புச் செய்துள்ளது. அதைப் போல இலங்கையின் பல பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் திருவள்ளுவருக்குச் சிலை எழுப்பப்பட்டு வருகின்றது. இலண்டன் மாநகர் இரஸ்ஸல் சதுக்கத்தில் ‘ஸ்கூல் ஆப் ரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவருக்குச் சிலையமைத்துச் சிறப்புச் செய்துள்ளார்கள்.

       அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் திருக்குறள் ஒரு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது என்பது, உலக அரங்கில் திருக்குறளின் பெருமைக்கு மேலும் ஒரு சான்றாகும்.

       உலகம் அழிந்து, அதிலிருந்து மக்கள் மீண்டு வருவார்களானால், அவர்களிடம் கிடைக்க வேண்டிய அரிதினும் அரிதான பொருள்கள் சிலவற்றை உருஷ்ய நாடு தேர்ந்தெடுத்து, அவற்றைப் பூமிக்கடியில் பாதுகாப்பாக வைக்கத் திட்டமிட்டது. உலகம் அணுகுண்டால் அழிக்கப்பட்டாலும் அழிக்கப்பட முடியாத பாதுகாப்பான நிலவறையில் அப்பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று திருக்குறள் எனும் செய்தி, நமது திருக்குறளுக்கு உலக அரங்கில் உள்ள இடத்தைத்  தெளிவாக்குகிறது அன்றோ

முடிவுரை:

       உலக அரங்கில் தமிழ்மறையாகவும், உலகப்பொதுமறையாகவும் போற்றப்படுகின்ற திருக்குறள் தமிழர்களிடத்தில் எவ்விடத்தைப் பெற்றுள்ளது என்பது நாம் சிந்திக்க வேண்டியதொன்றாகும். கல்வியிற் சிறந்த அறிஞர்களும் தமிழறிந்த புலவர்களும் மட்டுமே இன்று திருக்குறளைப் படிக்கின்ற நிலை இருக்கின்றது. பல தமிழர்களின் வீட்டில் பார்வைக்கும் அலங்காரத்திற்கும் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது. பல தமிழர்கள் இன்னும் திருக்குறளைப் பார்த்தறியாமலும், அப்படிப் பார்த்து வாங்கியவர்கள், அதனைப் பாதுகாக்கத் தெரியாமலும் இருக்கின்றனர். தங்கள் மறைநூலாகிய பைபிளை வைத்திராத கிறித்துவரைப் பார்த்தல் அரிதாகும். தங்கள் மறைநூலாகிய திருக்குரானை ஓதாத இசுலாமியரைப் பார்த்தல் அரிதாகும். ஆனால் தமிழ்மறையாகிய திருக்குறளைக் காணாத, கண்டும் பேணாத தமிழர்களைக் காண்டல் எளிதினும் எளிதன்றோ? உலக அரங்கில் திருக்குறளுக்கு உள்ள இடத்தைத் தெளிவுற அறிந்த பிறகாவது, தமிழர்கள் தங்கள் வீடுகளில் திருக்குறளை வாங்கி வைப்பார்களா? பேணிக் காப்பார்களா? ஒவ்வொரு நாளும் கையில் எடுத்துப் படிப்பார்களா?


******************

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்:

1.          ……..2016. இரண்டாம் ஐரோபியத்தமிழ் ஆய்வியல் மாநாடு மலர் – பாரிசு.
2.           இணையதளக் கட்டுரைகள்
3.           இராசசெல்வம், நா. 2008. திருக்குறள் உரைவளமும் கல்லாடன் உரைத்திறனும். சென்னை: காவ்யா பதிப்பகம்.
4.           சுந்தரமூர்த்தி, இ. (தொகுப்பாசிரியர்) 2000. குறளமுதம். சென்னை: தமிழ் வளர்ச்சி இயக்ககம்.
5.           திருக்குறள்.
6.           திருநாவுக்கரசு, க.த. 1978. திருக்குறளும் இந்திய அறநூல்களும். சென்னை: மணியகம்.
7.           திருநாவுக்கரசு, க.த. 1978. சான்றோர் கண்ட திருவள்ளுவர். சென்னை: மணியகம்.
8.           திருவள்ளுவமாலை.
9.           திருவாசகம்.
10.         பாரதியார் கவிதகள்.
11.        Thirunavukkarasu, K.D.Dr. 1986. Tributes and Translations of Tirukkural. Madras: Maniyagam Publications.
12.         Pope, G.U.Rev. 2004. Tirukkural. Chennai: Saratha Pathippagam.


******************









No comments: